சாகாவரம் கொண்டு தினம் தினம் செத்து மறுதினம் பிழைக்கும் வலிமை கொண்ட சூரியனாய்...
சூரியனின் வெம்மைத் தாங்கி மற்றவருக்கு ஒளியையும், குளுமையும் தந்திடும் பெண்ணியம் கொண்ட சந்திரனாய்...
சந்திரன் மேல் ஆசை கொண்டு தினமும் அலையை எழுப்பி கரை என்ற கட்டுக்குள் இருக்கும் கட்டுக்கடங்கா ஆழ்கடலாய்..
ஆழ்கடலில் மூழ்கி உப்பு நீரில் குளித்தாலும் முத்துக் குளியல் என்ற பெயரும் வழங்கும் விலைமதிப்பில்லா முத்தாய்...
முத்து சலங்கை உடன் போட்டிப்போட்டு காவியத்தில் நின்ற, சலங்கை கொண்ட மாணிக்கமாய்..
மாணிக்கம் மதிப்பினை மேலும் கூட்டிட கட்டுக் கதையோ அல்லது உண்மை நிலையோ என அறிய இயலாத அதனை காக்கும் நாகமாய்..
நாகமும் வளைந்து நெளிந்து தன் விஷமும் மங்கிடச் செய்யும் அழகிய பேச்சினை கொண்ட அற்புதப் பெண்ணாய்..
பெண்ணின் அழகை வர்ணித்திட கொடி இடை எனத் தோன்றும் அழகிய இடை, அழகாய் வளைந்து நெளிந்து நாகமாய்...
நாகம் என வளைந்து நெளிந்த இடையை அழகைக் கூட்டும் ஒற்றைக்குழி தொப்புள் ஜொலித்திடும் மாணிக்கமாய்..
மாணிக்க தொப்புள் கொண்ட அழகிய இடையில், இடையுடன் போட்டி போட்ட இடை ஆபரணம் மேலும் மெருகேற்ற தன்னுடன் வைத்த முத்தாய்..
முத்துப் போன்ற பற்கள் வைத்த அழகிய செவ்வாய் கொண்ட அவளது மனமோ நான் மூழ்கிப் போகும் ஆழ்கடலாய்...
ஆழ்கடல் மூழ்கி அங்கு காணும் இருளின் கருமையை திரட்டி முழுவதுமாய் பூசிய கருங்கூந்தல், அழகாய் அடங்கி கொள்ளும் வெண்ணிற காது பிறை ஒத்த சந்திரனாய்..
சந்திரன் போல் குளுமை தரும் அவளது தேகம் எனை விடுத்து பிறர் நெருங்கிட நினைத்தால் அனலை கக்கும் சூரியனாய்..
சூரியன் போல் ஒளிவீசி என் வாழ்வில் நல்வழி வழங்குவாள்.. அவளுடன் வாழும் என் நாளும் எனக்கு சாகா வரமே..
-- Deepakraj